ஆகஸ்ட் 09, 2011

உம்ரா செய்யும் முறை,பகுதி - 2


இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை

               
1. தலையை மறைக்கக் கூடாது

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப்படுவார்'' என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839)

"மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம்''என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.

2. தையல் ஆடை அணியக் கூடாது.

"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ,தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று விடையளித்தார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794)

பெண்களுக்கு மட்டும் தடையானவை


"இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1838)

இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.

இஹ்ராமுக்குப் பின்னால் தடுக்கப் பட்ட காரியங்களில் ஆண்களும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தாம்பத்யம் போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்தைப் பாழாக்கி விடக் கூடாது.

தலைமுடி மற்றும் நகங்களைக் களைவது இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டு உள்ளதால் அவற்றை இஹ்ராமுக்கு முந்தியே முடித்து விட வேண்டும்.இஹ்ராமின் எல்லையை அடைந்ததும்,"லப்பைக்க உம்ரத்தன்'' என்று கூற வேண்டும்.

இந்த இடத்தில் சிலர், ''நான் அல்லாஹ்வுக்காக உம்ரா செய்கிறேன், இந்த உம்ராவை இலேசாக்கி வை''என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தல்பியா கூறுதல்

அதன் பின்னர் மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும்.

لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ

"லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(பொருள் : இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1549, 5915
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவது திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.ஆனாலும், தல்பியாவை மட்டும் உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி) ,நூல்கள்: ஹாகிம், பைஹகீ)
ஹரமை அடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃப் செய்ய வேண்டும்.

தவாஃபுல் குதூம்

"குதூம்' என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு "தவாஃப் அல்குதூம்' என்று கூறப்படுகிறது.

இந்த நாளில் தான் "தவாஃப் அல்குதூம்' செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.

கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.

தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.

ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1611)

அந்தக் கல்லில் வாய் வைத்து முத்தமிடுவது என்பது இதற்கு அர்த்தமில்லை. கையால் அதைத் தொட்டு விட்டு கையை முத்தமிடுவது என்பதே இதன் அர்த்தமாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை என அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: நாபிவு,நூல்கள்: புகாரி 1606)

கையால் அதைத் தொட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத் தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும் போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆமிர் பின் வாஸிலா (ரலி),நூல்: புகாரி 1608

கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவது போல் சைகை செய்யலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293)

ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்து விடக் கூடாது.

நீ எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்கா விட்டால் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன் என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும் போது கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஆபிஸ் பின் ரபீஆ (ரலி),நூல்: புகாரி 1597, 1605, 1610)


தவாபை அஸ்வத் கல் பதிக்கப்பட்டிருக்கும் மூளையிளிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.சுற்றின் ஆரம்பத்தையும் முடிவையும் அறிந்துக் கொள்வதற்காக பச்சை விளக்கு பொருத்தப்பட்டு இருக்கும்.கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1644, 1617)

ருக்னுல் யமானி


கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் "யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 166, 1609)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار

ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

(பொருள் : எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!)
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி),நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616)ஹிஜ்ர் எனப்படும் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாஃப் செய்வது அவசியம்.
நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழு! ஏனெனில், இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச் சுருக்கி விட்டனர். மேலும், இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),நூல்: திர்மிதீ 802,பார்க்க: புகாரி 126, 1583, 1584, 1585, 1586, 3368, 4484, 7243)
                  
மகாமு இப்ராஹீமில் தொழுதல்


இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். இடம் கிடைக்காவிட்டால் மகாமு இப்ராஹீமுக்கு நேராக பின்னல் சென்று தொழலாம்.

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது வலம்வந்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிடமிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா?' என ஒருவர் கேட்டதற்கு அவர் இல்லை!" என பதிலளித்தார்.(புஹாரி 1600)

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ۖ وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ


(
இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.(அல் குர்ஆன் 2:125)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்து விட்டு மகாமே இப்ராஹீம்என்ற இடத்தை அடைந்த போது மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் குல்யாஅய்யுஹல் காஃபிரூன்சூராவையும், குல்ஹுவல்லாஹு அஹத்சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),நூல்: முஸ்லிம் 2137(பார்க்க புகாரி: 396, 1600, 1616, 1624, 1646, 1647, 1794)

ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல்


"தவாஃபுல் குதூம்' எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா,மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு "ஸஃபா' "மர்வா'வுக்கு இடையே ஓடினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188)

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ
بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ

இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்(அல் குர்ஆன் 2:158)

பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்;அறிந்தவன்.

 لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்'' என்ற (2:158)வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) "பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),நூல்கள்: முஸ்லிம் 2137)

ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு இடையில் செல்லும்போது விரும்பிய துஆக்களை கேட்டுக்கொள்ளலாம்.நபிகள் நாயகம் பிரத்தியமாக ஸஃபாவிர்க்கும் மர்வாவுக்கு நடுவில் எந்த துஆவையும் ஓதியதாக நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை.

ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயீ செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),நூல்: முஸ்லிம் 2137)

நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து "ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை'' என்றும் விளங்கலாம்.

முடியைக் கத்தரித்தல்

தலை மயிரைச் சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு; என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்(மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1727)

"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: அபூதாவூத் 1694)

இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல் அல்லது குறைத்தல், பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது.

உம்ரா முடித்துவிட்டுத் திரும்பும் போது கூற வேண்டியது
                                                                               
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ திரும்பும் போது மேடான இடங்களில் ஏறும்போதெல்லாம் மூன்று தக்பீர்கள் கூறுவார்கள். மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை! அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை! அவனுக்கே ஆட்சியும் புகழும்! அவன் அனைத்தின் மீதும் போராற்றலுடையோன்; நாங்கள், தவ்பா செய்தவர்களாகவும், எங்கள் இரட்சகனை வணங்கியவர்களாகவும், சஜ்தா செய்தவர்களாகவும்; அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம்! அல்லாஹ் தனது வாக்குறுதியை உண்மைப்படுத்திவிட்டான்! தன் அடியாருக்கு (முஹம்மத் ளஸல்ன அவர்களுக்கு) உதவி செய்துவிட்டான்! அவன் ஒருவனே (எதிரிகளின்) படைகளைத் தோற்கடித்துவிட்டான்!! என்று கூறுவார்கள்.(புஹாரி 1797)

நன்றி – ஆன்லைன் பி ஜே .காம் மற்றும் FRTJ.NET

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்