ஜூலை 22, 2011

மானவர்களின் கவனத்திற்க்கு !

படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.

1). நன்றாக கவனித்தல் (Observation)
2). தொடர்பு படுத்துதல் (Correlation)
3). செயல்படுத்தல் (Application)


 
நன்றாக கவனித்தல்:  
நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. என்ன கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.
தொடர்பு படுத்துதல்:
அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.
செயல்படுத்தல்:
நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.
கற்றல் செயற்பாங்கு : (Learning Process)
கவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் - அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.
குறிப்பு எடுக்க வேண்டும்:
ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.
எவ்வாறு படிப்பது?:
தலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.முக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.
ஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.
ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.அதனைச் சரிபார்த்து, மேலும் என்ன தெரிய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் படித்தால் அப் பாடத்தை எளிதாய் நம் மனத்தில் நிறுத்த முடியும்.
ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது.
கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும்.
தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.

இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு : உயிரியலில் சைட்டோபிளாசம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாசம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)

வினா எழுப்புதல்:(Asking Questions)
பாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.எதற்காக இதைப் படிக்கிறேன். அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)
வாசித்தல் (Read):
அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புப்படுத்தி எடுத்துக்காட்டோடு படிக்க வேண்டும்.புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதைத் தவிர்க்க வேண்டும்.மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.இதனால் திரும்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.
திரும்பச் சொல்லிப் பார்த்தல்:
வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.
மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.

தேர்வு எழுதிப் பார்த்தல்:
இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப்பார்க்க வேண்டும்.ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாடச்சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.
Thanks dinamani..

4 கருத்துகள்:

ஷர்புதீன் சொன்னது…

GOOD POST!

அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்) சொன்னது…

நன்றி சகோ.

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தக் கூடியதுதான்
நன்றி சகோ

அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்) சொன்னது…

அதுவும் உண்மைதான் !
நன்றி சகோ.ஹைதர் அலி

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்